வருச பிறப்பு!


புது வருச பிறப்பு!

2018
கொண்டு
சேர்த்திருக்கும்
கால-வெளியில்
ஒரு சந்திப்பு,
ஒரு திருநாள்…
திருவிழா…

2018
2019க்கு
நம்மை
தோள் மாற்றி
விட
தேர்ந்தெடுத்த
திருநாள்…

நமது
நெடும்பயணத்தில்
அடுத்த தடத்திற்கு
நம்மை
பொறுப்புடன்
சேர்த்த
2018க்கு
பிரியாவிடையும்
அடுத்த கட்டப்
பயணத்திற்கு
கரம் பிடித்து
வழகாட்ட
வரும்
2019க்கு
உறசாக வரவேற்பும்
அளித்து
கொண்டாடவேண்டிய
உன்னத
திருநாள்,
உன்னத திருவிழா…

நன்றிப்பெருக்கோடு
2018ஐ
வழியனுப்பி,
நம்பிக்கையோடு
2019இன்
கரம் பிடித்து
முன்னகர்வோம்
அடுத்த தடத்தில்
அடுத்த தளத்திற்கு…

 

புது வருசமே!


புது வருசமே!

வாழ்க்கை ஒரு கடலென்றால்
நீ ஒரு அலையாய்
என்னை மூழ்க விடாமல்
உன் தோள் மேல்
தாங்கிச் சென்று
இன்னொரு
கரையில் சேர்ப்பாயா?

வாழ்க்கை ஒரு புத்தகமென்றால்
நீ ஒரு பக்கமாய்
என்னை
சுயநலத்தில்
வீழந்துவிடாமல்
பொது நலத்தை
புரியவைத்து,
காத்து,
என் எண்ணங்களை
எள்ளளவேனும்
மேம்படுத்தி
அடுத்த பக்கமான
மற்றொரு
ஆண்டுக்கு
தோள் மாற்றுவாயா?

வாழ்க்கை ஒரு
நாடகமென்றால்
நீ ஒரு நல்ல காட்சியாய்
நல்லதை பிறருக்கு
எடுத்துச் சொல்லும்
நல்ல பாத்திரத்தில்
நல்லபடியாக
என்னை
மிளிர
வைப்பாயா?

வாழ்க்கை ஒரு பயணமென்றால்
நீ ஒரு இரயிலாய்
இயற்கை சிரிக்கும்
சிற்றூர்கள் வழியே
இழுத்துச் சென்று
வருசக்கடைசியில்
சத்தியத்தின்
தடத்திற்கு
இன்னும்
அருகே
கொண்டு
என்னை சேர்ப்பாயா?

 

வருகிறது 2019!


வருகிறது
புத்தம் புதிய வருசம்…

மீண்டும்
இன்னொரு வருசம்
கடந்து போகிறது…

நிறைய
நினைவுகளை
விட்டுச்செல்கிறது…

நல்லவையோ
அல்லவையோ
அவற்றை
அலசிக் கொண்டிருக்க
அவசியமில்லை…

ஏனெனில்
அவை இனி
நேற்றைய
வரலாறு….

இன்னொரு
புத்தம் புதிய
வருசம்
வர காத்திருக்கிறது…

நாளும்
நம்மை
மேம்படுத்தி
அனுபவசாலியாக்க…

முதிர்ச்சி பெற
வைத்து
முன்னேற
வைக்க…

பேரார்வத்துடன்
தயாராவோம்!

அதிசயித்து
லயிக்க!

ஒவ்வொரு
நாளும்
அது
நாளைய
மர்மங்களை
அவிழ்க்க!

 

இசை!


இசையே!

கலைகளின் அரசியே!

தூய ஆனந்தத்தின்
புனித ஆதாரமே!

இன்பத்தை மட்டுமா
இரட்டிப்பாக்கிறாய்?

திருமண
விருந்துகளையும்
பிறந்த நாள் கொண்டாட்டங்களையும்
மட்டுமா
சிறக்க வைக்கிறாய்?

இரங்கி
துயர் விழுங்கி
மலங்க மலங்க
விழிக்கும்
இதயங்களையும்
அல்லவா
வருடிக் கொடுக்கிறாய்?

இறப்பாலும்
பிரிவாலும்
இழப்பால்
ஸ்தம்பித்த
இதயங்களை
நீவி விட்டு
மீண்டும்
துடிக்க வைத்து,
திணறிய சுவாசங்களை
சீராக்கி,
நெற்றிகளை பிடித்து விட்டு,
சோர்ந்த செவிகளில்
ஆறுதல்களை
இதமாக
மொழிகிறாயே…

நீயல்லவோ
அந்த நீதிதேவதையை
விட
உயர்ந்தவள்?
உண்மையில்
இறைவி …

உனை என்
சொல்லி
வாழ்த்துவனே!

இருண்ட உண்மை…


இருண்ட உண்மை…

பாடும் பறவைகள்
அறியுமா?
அவற்றின்
முடிவை,
மரணத்தை….

அறியாது…

சுகராக
சுவாசம்
மரணப்பெருமூச்சாக
மாறி சாகுமென்று
அறியுமா?

அறிந்தால்
நித்தம்
என்னை உயிர்ப்பிக்க
ஜீவனோடு பாடுமா?
என் வீட்டு
வேப்பமரத்துக் குயில்…
அதோ
மந்தை மந்தையாக
மேய்கின்றனவே
ஆடுகள்
மலையடிவாரத்தில்…

அவை கற்பனையில்
கூட
கண்டிருக்குமா?
கசாப்புகடைக்காரனின்
உயிர்குடிக்கும்
வெட்டுக்கத்தியில்
நிழலை…

இயற்கையே
பேரிரக்கத்துடன்
இந்த இருண்ட
உண்மையை
அவற்றிற்கு
மறைத்த
நீ
உன்
ஆகச்சிறந்த
படைப்பான
மனிதனுக்கு
மட்டும்
கல்லறையைப் பற்றிய
தெளிவை
ஏன்
விரித்து காட்டினாய்?

மண்ணோடு மண்ணாகப்போகும்
அந்த
முடிவை
ஏன் மறைக்காமல்
காட்டினாய்?

பாடும் பறவைகளும்
மேய்ந்து திரியும் விலங்குகளும்
ஆனந்தமாய்
அனுதினத்தையும்
எதிர்கொள்கின்றன
ஆனந்தமாக
இந்த இருண்ட
உண்மையை
அறியாமல்
வெகுளியாய்…

மனிதனை
மட்டும்
ஏனிப்படிச்
சபித்தாய்…

தான்
பாடையில்
சுடுகாட்டுக்கு
சமந்து போகப்படுவதை
கற்பனையில்
கண்டு
தன் மீது
கழிவிரக்கம்
கொள்ள
ஏன் வைத்தாய்?

இல்லை…

இதுவே
அவனுக்கு
படுக்கையிலிருந்து
பாடைக்கு
உறுதியோடு
மாறி கிடக்க
நீ
அவனுக்கு
உவந்தளித்த
வரமா?

 

மிகை…


 

மிகை …
மிகை
என்கிறார்கள்…

தேவை பூர்த்தியானால்
மட்டும் போதாதாவென
கேட்கிறார்கள்

இயற்கையை
நாம்
எப்படி அறிகிறோம்?

வெறும்
மழையை மட்டும்
அது
பெய்வித்தால் போதாதா?

வண்ணக்கலவையாய்
ஒரு வானவில்லை
மழைக்கூடாக
அது
ஏன் வானில்
விட்டெறிகிறது?

இனப்பெருக்கத்தை
பருவகாலத்தில்
வெறும் ஈருயிர சேரும் ஒரு
சாதாரண
இயக்கமாக
நிகழ்த்திவிட்டு
அது ஏன் கடந்து
போகக்கூடாது?

ஏன் காதலென்ற
நெருப்பை சேர்த்து
ஊடலென்னும் நெய்யை ஊற்றி
கூடலை
கொழுந்து விட்டறியும் ஜோதியாகக்கண்டு
கைகொட்டி
மகிழுகிறது?

வீணான
களைகளுக்கு
கூட
மொட்டருளி,
பூவளித்து
மகரந்த சேர்க்கை
இரந்து
குதூகலிக்கிறது..?

பறந்து திரிந்து
இரை தேடி
பிழைக்கும்
பறவைக்கு
இன்னிசை ஈந்தது ஏன்?

மானுடம் மட்டும்
ஊண்டிப் பார்த்தால்
படைப்பில்
பேரிரக்கமும்
பெருங்கொண்ட
கலைமனதும்
ஊற்றெடுப்பதை
காணலாம்…

கண்டு
அதிகாரம்
கைகூடும்
போது
அவ்விரண்டையும்
தாராளமாக
மனங்கொள்ளலாம்..

 

காத்திருக்கிறோம்…


 

மூத்து,
தனித்து,
முதுமையில்
சிறைவைக்கப்பட்டு…

ஒரு காலத்தின்
அரைகுறை
நினைவுகள்
மட்டுமே
துணைக்கு,
அவையும்
கோர்வையாக
இல்லை..
முன்னும் பின்னும்
தாறுமாறாக…

இரவின் மவுனம்
பகலை விட
மிக மிக
கனக்கின்றது…

நிலவு
எங்கள் கனவுகளைத்
தொலைத்த
முகங்களைக்
கண்டு
வெளிறுகிறது…

நாங்களும்
ஏதும் பேசுவதில்லை…

கட்டுப்படுத்த
முடியாமல்
எங்கள்
மண்டைகளும்
தாமாகவே
ஆடிக்கொண்டிருக்கின்றன…

பொந்துகளுக்குள்
இரண்டு கண்களும்
ஒடுங்கி போயிருக்கின்றன…

யாரோ ஒருவர்
லாந்தரை ஏந்தி வருகிறார்…

எவரோ
ஒருவர் பெயர் அழைக்கப்படுகிறது…

எங்கள் மத்தியிலிருந்து
ஒருவர்
“இதோ…
இங்கே..
நான்”
என்று
கை தூக்குகிறார்…

அவர் அருகில்
வந்த விளக்கேந்தியவர்
“உங்களுக்கு
வயசாயிடுச்சு…
வாங்க போகலாம்”
என்கிறார்…

அவரும் கிளம்புகிறார்
வேண்டா வெறுப்பாக
வேறு வழியின்றி…

காத்திருக்கிறோம்
விளக்கேந்தியவர்
திரும்ப வந்து
அவரவர் பெயரை
விளிக்க…

 

கவிஞனே!


 

இவர்கள்,
இன்றின்
இப்பொழுதின்
வாசலில்
தயங்கி நிற்பவர்கள்,
நேற்றின் நினைவுகளில்
உழன்றுகொண்டிருப்பவர்கள்,
பாதையறியா
பாமரர்கள்,
எவருக்கேதும்
திசை காட்டி
உதவத் தெரியதவர்கள்,
உருட்டி விளையாடும்
விதியின்
கைப்பாவைகள்…

நுரைத்து
ஒன்றோடு
ஒன்று
ஒட்டி
நடனமாடும்
நீர்க்குமிழிகள்,
பிரபஞசமெனும்
பிரவாகத்தில்
நுரைத்து
மறைபவர்கள்,

தவறுக்கும்
சரிக்குமிடையே
இலக்கே இல்லாமல்,
எதைத்தேடுகிறோமென்றே
அறியாமல்,
தேடித் தொலைபவர்கள்…

இவர்களுக்காக
நீ
மிக மிக
மிருதுவான
இதயத்தைக்
கொண்டிருக்கவேண்டும்…

அதே சமயம்
இவர்களின்
சின்ன துடிப்புக்கு கூட
அது ஆவேசங்கொண்டு
கொதித்தெழ வேண்டும்….

எப்பொழுதும்
நீ இவர்களின்
தாழ்ச்சியைக் கண்டு
குமறி எழவேண்டும்…

சதா
இவர்களின்
ஒளிமயமான
வாழ்வை
கனவு கண்டு
அதைப் பாட
வேண்டும்…

இவர்களை போலல்லவே
நீ,
ஆனால்
இவர்களுக்கெனவே
வேறுவகை
மண்ணில்
பிசையப்பட்டவன்,
வேறொரு மனம்
இரங்கப்பட்டவன்…

ஆகவே கவிஞனே!
இவர்களுக்கென
விதி விரிக்கும்
இருண்ட பாதையில்
உன் கவித்துவ
தீப்பந்தமேந்தி
இவர்களுக்கு
ஒளி காட்டி
வழி நடத்திச்செல்
அடி மேல் அடி…

 

மனசாட்சியும் கழிவிரக்கமும்…


 

என் போக்குக்கு
என்னை
வாழ விடாமல் இடித்துரைத்துக் கொண்டேயிருந்தது
மனசாட்சி;

கடிந்து பார்த்தேன்…
திருந்தவில்லை.
கடுப்பாகி
கத்தினேன்,
“போய்த் தொலையேன்
என்னை விட்டு”
என்றேன்….

கெஞ்சிய
அதை
தள்ளிவிட்டேன்
கழுத்தைப்பிடித்து,
ரோசம்கொண்ட
மனசாட்சியும்
விலகிப் போனது
வெகு தூரம்…

அதிக காலம்
பிடிக்கவில்லை
எனக்கே என்
வேகம்
தாங்கவில்லை,
“அருகில்
அமட்ட
மனசாட்சி
இருந்தால்
நல்லா இருக்குமே”
என்று அதை தேடிப்பிடித்து
அழைக்க,
அது வந்தமர
மறுத்து விட்டது…

கெஞ்சியும் கூத்தாடியும்
வர மறுத்த
அது
சொன்ன
காரணம்:
“நான் நினைத்தாலும்
இனி திரும்ப
இயலாது
தோழனே!
நானிருந்த இடத்தில்
அழுத்தமாக
குந்தியிருக்கிறது
உன்னை குலைக்க
உன் கழிவிரக்கம்”

 

நான் இறந்த பின்…


 

அத்துவிதமாக
அப்பில்
உப்பு போல
அதில்
இரண்டற
கலந்து
நிக்கமாட்டேன்…

சுவர்க்கத்தின்
சோலைகளில்
நரகத்தின்
தீக்குழிகளில்
தேடவேண்டாம்…
இரவுகளில்
ஒற்றை புளியமரங்களிலும்
வேப்ப மரங்களிலும்
சுடுகாடுகளிலும்
பாழடைந்த
தூர்ந்த
இடிபாடுகளிலும்
பேயாக
பிசாசாக
அலைந்து கொண்டிருக்க
மாட்டேன்…

புதைந்து
கிடப்பேன்
என் வரிகளுக்கிடையில்
வார்த்தைகளுக்கு
மத்தியில்…

எல்லாம்
உங்கள்
உதடுகளில்
இருக்கிறது…

ஆம் அன்பர்களே!
நண்பர்களே!
அவை மட்டும்
என் வார்த்தைகளை
உச்சரித்தால்
உயிர் வாழ்வேன்
மரணத்துக்கு
அப்பாலும்…